tamilnadu

img

தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் குழு உருவாகிறது

1934ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் தீவிர மனோபாவம் கொண்ட காங்கிரஸ் ஊழியர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்கி பலப்படுத்தி வந்தனர். அச்சமயத்தில் தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்னிர்களான பி.சுந்தரய்யாவும், எஸ்.வி. காட்டேயும் அவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் சிந்தனையில் மார்க்சிய கருத்துக்களை விதைத்து ஒன்பது பேர் குழுவையும் அப்படியே கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றி தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் குழுவை 1936ஆம் ஆண்டில் உருவாக்கினர். அந்த 9 பேரும் நாட்டு விடுதலைக்காக சிறை சென்ற தேசபக்தர்கள். அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

1. சி.எஸ்.சுப்ரமணியம், 
2. பி.ராமமூர்த்தி, 3.ப.ஜீவானந்தம், 4. ஏ.எஸ்.கே.அய்யங்கார், 
5. கே.முருகேசன், 
6. டி.ஆர்.சுப்ரமணியம், 
7.பி.சீனிவாசராவ், 
8. சி.பி.இளங்கோ, 9.திருத்துறைப்பூண்டி சுந்தரேசன்

1. சி.எஸ். சுப்பிரமணியம் 

முதல் கிளையின் செயலாளரான  தோழர் சி.எஸ்.சுப்ரமணியம் சென்னை ராஜதானி கல்லூரியில் இளம்கலை பட்டம் பெற்று பின் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அச்சமயத்தில் அவர் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அங்கே கம்யூனிஸ்ட் ஆனார். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘டெய்லி ஓர்க்கர்’ ஏட்டில்  உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பின் பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ் ஆகியோருடன் சேர்ந்து தொழிற்சங்கங்களை உருவாக்கினார். அந்தக் கிளையின் செயலாளரானார். 1940ஆம் ஆண்டில் சென்னை சதி வழக்கில் அவர் நான்கு ஆண்டு கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின்  மீதான தடை நீங்கிய போது விடுதலை செய்யப்பட்ட அவர் ‘ஜனசக்தி’ ஏட்டை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பின் அவர் மார்க்சிய ஆராய்ச்சியாளராக மாறி ‘சிங்காரவேலு- தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதினார். 102 ஆண்டுக் காலம் வாழ்ந்த அவர் 2014ம் ஆண்டு காலமானார்.

2. ப.ஜீவானந்தம்

தோழர் ப.ஜீவானந்தம் சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர். புகழ்பெற்ற தமிழ் அறிஞர். 1937ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை ‘ஜனசக்தி’ ஏட்டின் ஆசிரியராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடான ‘தாமரை’-யின் ஆசிரியராகவும் இருந்தார். தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் மற்றும் இலக்கியப் பேச்சாளர்களில் முக்கியமானவர் ஆவார். 1948-51 ஆண்டு காலங்களில் வேலூர் சிறையில் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளானவர். ஏராளமான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘காலுக்குச் செருப்பும் இல்லை கால் வயிற்றுக் கூழும் இல்லை’ போன்ற உணர்ச்சியூட்டும் பாடல்களை எழுதிய வர்க்கக் கவிஞர் அவர். 

3. ஏ.எஸ்.கே.அய்யங்கார்

தோழர் ஏ.எஸ்.கே. 1906ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் இருந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘சுதந்திரம்’ பத்திரிகையை நடத்தினார்.  அது தடைசெய்யப்பட்டது.  பின் அவர் “இளைஞர்கள் பௌதிகக் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் சென்னை வந்தார். மார்க்சிய அறிஞர் சிங்கராவேலுவுடன் சென்னையில் தொடர்பு ஏற்பட்டது.  பி.சுந்தரய்யா நடத்தி வந்த ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகத்தில்’ அவர் செயல்பட்டார். 1931ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்  செயலாளரானார்.  1940 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏ.எஸ்.கே.யும், எஸ்.வி.காட்டேயும் சிறிது காலத்திற்குப் பிறகு ராஜஸ்தானில் இருந்த தியோலி முகாம் சிறையில் பி.டி.ரணதிவே மற்றும் சுர்ஜித் போன்றவர்களுடன் 1942 ஆம் ஆண்டு வரை காவலில் வைக்கப்பட்டனர்.  விடுதலை ஆன பின் ஏ.எஸ்.கே. சென்னையில்  துறைமுகத்  தொழிலாளர் சங்கம் என்ற பலமிக்க அமைப்பை உருவாக்கினார். அந்தத் தொழிலாளர்களுக்கு ஏராளமான உரிமைகளைப் பெற்றுத் தந்தார். சுதந்திரப் போராட்டத்திலும் அதற்கு பின்னர் கம்யூனிஸ்ட் போராட்டங்களிலும்  10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்துள்ளார்.

4. கே.முருகேசன்

தோழர் கே.முருகேசன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். மார்க்சிய அறிஞர் சிங்காரவேலரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்.  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு 1939ஆம் ஆண்டில் ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்பட்டு 1942ஆம் ஆண்டு ஜூலை வரை சிறையில் இருந்தார். 1948ஆம் ஆண்டில் கட்சி தடைசெய்யப்பட்ட பொழுதில் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டவர். 1951ஆம் ஆண்டு வரை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் அவர் வேலூர் சிறையில் கடும் தடியடிக்கும், சித்ரவதைக்கும் ஆளானார்.  விடுதலை ஆன பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுச் செயலாளராகவும் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 1966ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி காட்டியபோது கே.முருகேசன் கைது செய்யப்பட்டு கடுமையான தடியடிக்கு ஆளானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராக இறுதிவரை பாடுபட்ட கே.முருகேசன் 1991ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

தொடரும்...